Tuesday, April 14, 2009

S.M.S எம்டன் 22-10-1914

S.M.S எம்டன் 22-10-1914 நூல் விமர்சனம்

நூலாசிரியர் திவாகர் விசாகப்பாட்டினம்

நூல் விமர்சனம் என்பது நூலை படிக்கின்ற வாசகனுக்கு அளிக்கப்படுகின்ற ஒரு சுதந்திரம் என்று நான் கருதுகிறேன். படிக்கின்ற ஒவ்வொருவரும் ஒரு நூலை பல்வேறு கோணங்களில் காண்பதற்கும் உணர்வதற்கு வாய்ப்புக்கள் உண்டு. ஒரு நூல் தரும் தாக்கம் என்பது பல்வேறு வகைப்படும். வாசித்து பல நாட்கள் ஆகிய பின்னரும் மனதில் ஏதாவது ஒரு வித தாக்கத்தை ஒரு நூல் அளித்தால் ஒரு வகையில் அதனை எழுதிய நூலாசிரியர் வெற்றி பெற்றவராகின்றார். சிறந்த படைப்புக்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கும் போது அதனை விமர்சனப் பார்வையோடு அலசி அறிமுகப் படுத்துவது ஒரு வித சமுதாயப் பணியும் கூட. இது நூலை வடிக்கின்ற அந்த சிற்பிக்கு தனது படைப்பு எவ்வகை தாக்கத்தை வாசகர்களிடையே ஏற்படுத்தியிருக்கின்றது என்ற ஒரு கணிப்பை நிச்சயமாக வழங்கும்.

நூலை படிக்கும் போது அதில் கிடைக்கின்ற புரிதலை விட அதனை ஆய்வு செய்ய வேண்டும் விமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு வாசிக்கும் போது எனது அறிவுப் பாதையும் விசாலமடைவதை நான் உணர்கிறேன். பல நூல்களை நான் வாசிக்கின்றேன். அதில் சில எனது மனதில் ஆழமான தாக்கத்தை உண்டாக்கியிருக்கின்றன. நாவல்கள் மட்டுமல்ல, சிறுகதைகள், குறுந்தொடர்கள் சில கவிதைகள் - இவற்றில் அடக்கம்!

நாவல்களில் பல வகை உண்டு. அதில் வரலாற்று உண்மையைக் சிறிது கற்பனையோடு கலந்து வழங்குவதில் குறிப்பிடத்தக்கவராக விளங்குகின்றார் திவாகர். இவரது திருமலைத் திருடனை படித்தபோது இவரது முயற்சி சாதாரண ஒன்றல்ல என்ற உண்மை புலப்பட்டது. இப்போது புதிதாக பிறந்துள்ள இவரது வரலாற்று நாவல் "S.M.S எம்டன் 22-10-1914" இந்த அற்புதமான எழுத்தாளரை கொண்டிருப்பதில் தமிழ் எழுத்தாளர் உலகிற்கு பெருமையைச் சேர்த்திருக்கின்றது என்று நிச்சயமாகச் சொல்லலாம். ஒரு கதையை எழுதும் போது அன்றாட வாழ்க்கையை சித்தரிப்பதாக கதை போக்கு அமைந்திருந்தால் அதில் நூலாசிரியருக்கு நிறைந்த சுதந்திரம் இருக்கும் - தனது கற்பனையை படைப்பாக மாற்ற! வரலாற்று நாவல் என்னும் போது அதில் இந்த சுதந்திரப் போக்கு இல்லாமல் ஆய்வுக்கு நிச்சயமாக இடமளித்தே ஆகவேண்டிய நிர்பந்தம் உள்ளது. அதை மீறும் போது அது வரலாற்று நாவலாக அல்லாமல் ஒரு கதை என்ற வட்டத்திற்குள் விழுந்து விடும். வரலாற்று நாவல் என்ற அந்தஸ்து கிடைக்காது. இது ஒரு சிக்கல்.

இந்த நாவலுக்கு மேலும் ஒரு சிறப்பு கடலோடி நரசய்யாவின் அணிந்துரை. சிறந்த வரலாற்று நூலாசிரியரை நூலை அலசி அணிந்துரை வழங்க வைத்திருக்கின்றார் திவாகர். அணிந்துரையே இந்த நூலுக்கு சிறந்த ஒரு அறிமுகமாகவும் அமைந்து விடுகின்றது.

இந்த நூலை வெவேறு அங்கங்களாகப் பிரித்து சிந்திக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். அந்த எண்ணத்தை மனதில் கொண்டு எனது இந்த நூலைப்பற்றிய சிந்தனை ஓட்டத்தை செலுத்தியிருக்கின்றேன். முதலில் என்னை கவர்வது கதை மையக் கருத்தாக எடுத்துக்கொண்டுள்ள கரு.

இது தற்போதை பல தமிழ் நாவல்களிலிருந்து மாறுபட்ட கரு. நடந்த உண்மைகளோடு கற்பனை கலக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு முக்கிய விஷயங்கள் எடுத்தாளப்பட்டிருகின்றன. ஒன்று S.M.S எம்டன் என்ற ஜெர்மானியக் கப்பல் அந்நாளில் இந்து மகாக் கடலில் ஏற்படுத்திய தாக்கம். மற்றொன்று சைவ பாரம்பரியம் மற்றும் சோழ மன்னனின் பரம்பரை பற்றிய செய்திகள். இரண்டும் எப்படி கலக்கின்றன? அதிலும் 1914ம் ஆண்டு வாக்கில் இது எப்படி ஒரே நேரத்தில் குறிப்பிடப்பட முடியும் என்ற கேள்வியை தகர்த்து கதையை நேர்த்தியாக கொண்டு செல்கிறார் திவாகர்.

இந்த நாவலில் சில குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்கள் வலம் வருகின்றன. சிதம்பரம் பிள்ளை,கந்தசாமி, ராதை, நோபிள், கமாண்டர் மிக்கே, காப்டன் மூல்லர், தம்பிரான் சுவாமிகள் ஆகியோருக்கு கனமான பாத்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவர்களோடு மேலும், டி.ஐ.ஜி.லாங்டன், லகுளீசப் பண்டிதர், சிவபாதசேகரராக தன்னை மாற்றிக் கொண்ட இராஜராஜ சோழன், இராஜேந்திரன், மச்சு சிரேட்டியார், தம்பிரான் சுவாமிகள், சிற்றம்பல நாடிகள், சிதம்பரம் பிள்ளை, முத்து எனப் பலரது கதாபாத்திரங்களும் இந்நாவலைஆக்கிரமிக்கின்றன.

கதையில் ஆங்காங்கே சரித்திர நிகழ்வுகளின் குறிப்புக்கள் சேர்க்கப்பட்டிருப்பது இந்த நாவலுக்கு வலுவைச் சேர்க்கின்றது. அதே சமயம் வாசகர்களுக்கு எந்தப் பகுதி சரித்திர உண்மை எந்தப் பகுதி கற்பனை என்பதை பிரித்து அறிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படுத்தும் என்பதும் உறுதியாகின்றது. இந்த நாவலைப் படிக்கின்ற ஒரு வாசகன் நிச்சயமாக மேலும் இது தொடர்பான பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் தனது கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளதால் சிந்தனைக்கும் பொது அறிவுத் தேடலுக்கும் இது ஒரு சிறந்த படைப்பு என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

திவாகரின் ஆழமான சைவ சமையப் பற்று இந்த நாவலில் நன்றாகவே வெளிப்படுகின்றது. சைவ பாரம்பரியம், சந்தான குருமார்களின் விபரங்கள், சிற்றம்பல நாடிகளின் சாம்பவ விரத நிகழ்வு அதனோடு ஒட்டிய சித்தர் காட்டு நிகழ்வுகள், கதை மாந்தர்கள் பிரச்சனை என்று வரும் போது சிவனை மனதில் உறுதியாக நினைத்து இறைவன் அருள் வேண்டி நிற்பது போன்ற இடங்களில் தனது பக்தியையும் வெளிக்காடிக் கொள்கின்றார் திவாகர்.


ராதையோடு காதல் கொண்டு அவளை மனதால் பிரியாமல் இருக்கும் சிதம்பரம் நோபிளின் பால் கொள்ளும் சலனம் ஆரம்பத்தில் கொஞ்சம் உறுத்தலாகவே இருக்கின்றது. கதாசிரியர் இந்த உயர்ந்த பாத்திரத்தின் இந்த செயலை நியாயப்படுத்துகின்றாரோ என்ற நோக்கத்தோடு வாசித்துக் கொண்டு வரும் போது ஒரு கட்டத்தில் இந்த சலனமும் தவறு என்பதை சுட்டிக் காட்டுவதிலும் கதாசிரியர் தவறவில்லை. இது மனதிற்கும் நிறைவாக அமைந்து விடுகின்றது.

இந்த நாவலில் கடல் பயணத்தின் போது சீனன் என்ற ஒரு கதாப்பத்திரமும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. கதை முழுக்க இந்த சீனர் சீனராகவே வருகிறாரே தவிர மற்றவர்களுக்கு உள்ளது போல இவருக்கு ஒரு பெயர் குறிப்பிடப்படவில்லை. இதனை தவிர்த்து இவருக்கும் ஒரு பெயரை வைத்திருக்கலாம்.

சில இடங்களில் ஜெர்மானிய வார்த்தைகளின் கலப்பு கதையோடு சேர்ந்து வருவதும் ஒருவித அன்னியப்போக்கை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக " டாக்டர்.. நிச்சயமாக டங்கே சொல்ல வேண்டும்" என்பது போன்ற இடங்களில் வற்புறுத்தி மொழிக் கலப்பு செய்யப்பட்டுள்ளது போன்ற எண்ணம் தோன்றுகின்றது. ஆனாலும் இது ஒரு பெரிய குற்றம் அல்ல. எப்படி நமது அன்றாட தமிழ் பேச்சு மொழி பயன்பாட்டில் ஆங்கிலம் கலந்த தமிழ், மலாய் கலந்த தமிழ் என்று வருகின்றதோ அதே போல இது ஜெர்மன்(டோய்ச்) மொழி கலந்த ஒரு தமிழ். இது எனக்குப் புதிதுமல்ல. ஜெர்மனியில் இரண்டாவது தலைமுறைத் தமிழர்கள் இப்படித்தானே தமிழை பேசி வருகின்றனர்! இந்த ஜெர்மன் மொழி அதாவது டோய்ச் மொழி கலந்த தமிழ் ஒரு வகையில் ஜெர்மனியில் தமிழ் மக்களிடையேயான பேச்சு வழக்கில் அன்னியமற்றதாகி விட்ட நிலையில் இதனை நூலிலும் கலந்து பார்ப்பதில் இது ஒரு பெரிய குற்றமாக என்ணத்தோன்றவில்லை.

இந்த நூலில் மேலும் ஒரு சிறப்பு இருக்கின்றது. கேப்டன் மூல்லர், மிக்கே மற்றும் ஜெர்மானிய வீரர்களின் பழக்க வழக்கங்களை விவரிக்கும் அழகு என்னை மிக்கவும் ஆச்சரியப்படுத்தியது. நான் அனுபவத்தில் வியந்து போற்றும் ஜெர்மானியர்களின் சில சிறப்பான பண்பு நலன்களை இவர் இந்த நூலில் தக்க சந்த்தர்ப்பங்களில் கையாண்டிருப்பது இந்த நூலுக்காக திவாகர் மேற்கொண்ட திறமான ஆய்வினை வெளிக்காட்டுகின்றது.

நாவலைப் படிக்க படிக்க எத்தனையோ புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. இந்த சிறந்த போர்கப்பல், தான் பயணித்த கடல் பாதையில் நிகழ்த்திய சாகசங்கள், அடைத்த வெற்றிகள் போன்றவற்றைப் படித்து கொள்ளும் போது முந்தைய சரித்திரத்தின் பெருமையை உணர முடிகின்றது. இந்த நாவலை படித்துக் கொண்டிருக்கும் வேளையில் தற்செயலாக வேரொரு நூலில் 13ம் நூற்றாண்டு ஜெர்மன் வரலாற்றைப் பற்றி படிக்க நேர்ந்தது. அதில் ஒரு வரை படத்தில் ஜெர்மனியின் வடக்குப் பகுதில் இருக்கும் எம்டன் என்ற ஒரு பிரசித்தி பெற்ற நகரத்தைப் பற்றி இந்த நூல் குறிப்பிட்டிருந்தது. வலைப்பக்கங்களில் தேடிய போது இந்த நகரத்தைப் பற்றிய மேல் விபரங்களை மேலும் தெரிந்து கொள்ள முடிந்தது. நெதர்லாந்துக்கு மிக அருகில் அமைந்துள்ள கடற்கரை நகரம் எம்டன். விக்கிபீடியாவில் எம்டன் நகரம் 8ம் நூற்றாண்டு தொடக்கம் அமைப்புற்றதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அமுதோன், எம்டா, போன்றயவை இந்த நகரத்திற்கு வழங்கி வந்த பிற பெயர்கள் என்றும் 17ம் நூற்றாண்டு வாக்கில் இந்த நகரம் மிகப் பிரசித்தி பெற்ற வளம் கொழிக்கும் நகரமாக இருந்துள்ள செய்தியையும் வலைப்பக்கங்களின் வழி அறிய முடிகின்றது. டச்சுக் காரர்களில் பலர் இங்கு குடிபெயர்ந்துளளனர். ஆனால் இரண்டாம் உலகப்போரின் சமயம் இந்த நகரம் ஏறக்குறைய முற்றிலும் அழிக்கப்பட்டது ஒரு கொடூரம். உலகப் போர் காலங்களில் 3 கடற்படை கப்பல்கள் இந்த நகரின் பெயரைக் கொண்டிருந்தன. அவற்றில் இரண்டு முதலாம் உலகப்போரிலும் மற்றொன்று 2ம் உலகப் போரிலும் ஈடுபட்டது. தற்சமயம் கூட இந்த நகரின் பெயரைத் தாங்கிய ஒரு கடற்படை கப்பல், ஜெர்மானிய கடற்படையில் உள்ளதாகவும், 1980ல் கட்டப்பட்டு 1983ல் கடற்படைச் சேவையில் இந்தக் கப்பல் சேர்க்கப்பட்டதாகவும் விக்கிப்பீடியா மேலும் விவரிக்கின்றது.

நாவலில் உள்ள மற்றொரு சிறப்பு, ராதை மிகத்துணிச்சலாக மேற்கொள்ளும் ஆய்வுகள். சுவாரசியமான அவளது அனுபவங்கள் அதற்காக அவள் மேற்கொள்ளும் முயற்சிகள் போன்றவை சிறப்பாக வழங்கப்பட்டிருக்கின்றன. ராதையின் இந்த ஆய்வுகளுக்குப் பின்னால் ஒரு சுயநல காரணம் இருந்தாலும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே தனது உலகத்தை கண்டு வந்த பெண்கள் மத்தியில் இப்படியும் ஒரு தமிழ் பெண் துணிச்சலாக செயலாற்றினாள் என்று சொல்வது வித்தியாசமான ஆனால் பெருமைப்படக்கூடிய ஒரு விஷயமே. இதற்காகவும் திவாகரை பாராட்டலாம்.

பொதுவாகவே திவாகரின் நாவல்கள் தனது தனிச்சிறப்பை வெளிக்காடிக் கொள்வதில் தவறியதில்லை. திருமலைத் திருடனை முதன் முதலில் படிக்க நேர்ந்த போது வாசிப்பதை நிறுத்தமுடியாமல் ஒரு தீவிரத்தோடு படிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தந்தது. அந்த உணர்வு இந்த நூலிலும் குறையவில்லை. ஒரு வகையில் இந்த நாவல் மேலும் அதிகமான ஆர்வத்தைத் தருவதாகவே உள்ளது. ஒரு நாவல் ஏதாவது ஒரு வகையில் ஒரு வித ஆழமான சிந்தனைத் தேடலை, விஷய ஞானத்தை வழங்க வேண்டும் என்பதில் நான் அக்கறையாக இருப்பேன். இது என்னுடை தனிப்பட்ட எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பினை இந்த நாவல் ஏமாற்றவில்லை. திவாகரின் சிறந்த ஒரு படைப்பு இது. வாங்கிப் படிக்கும் வாசகனை இந்த நாவல் நிச்சயமாக ஏமாற்றாது.

Saturday, November 10, 2007

பறங்கிக்காய் கண்காட்சி

கண்காட்சிகள் பலவிதம். இங்கு ஜெர்மனியில் லுட்விக்ஸ்புர்க் நகரில் கடந்த 2 மாதங்களாக பொதுமக்கள் பார்வைக்காக ஏற்பாடாகியிருந்த பறங்கிக்காய் கண்காட்சி கண்ணுக்கு விருந்தாக அமைந்திருந்தது. 31 ஆகஸ்டு தொடங்கி 4 நவம்பர் வரை இந்த கண்டகாட்சி நடைபெற்றது. உலகின் எல்லா கண்டங்களிலும் காணப்படும் மிருகங்களின் சாயலில் பறங்கிக்காய்களைக் கொண்டு மிருகங்களின் வடிவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சி லுட்விக்ஸ்புர்க் அரண்மனையின் மலர் பூங்காவின் ஒரு பகுதியில் அமைக்கட்டிருந்தது. 500,000க்கும் மேற்பட்ட பறங்கிக்காய்கள் இந்த கண்காட்சியில் பயண்படுத்தப்ப்பட்டிருந்தன. அத்தோடு உலகின் பல மூலைகளிலிருந்து தருவிக்கப்பட்ட 400 வித்தியாமான் பறங்கிகள் பெயரிடப்பட்டு கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்படிருந்தன.


இந்த கண்காட்சியின் போது மிகப் பெரிய கணமான பறங்கிக்க்காய்களுக்கான போட்டியும் சேர்ந்தே நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் கணமான பறங்கிக்க்காய்க்கான பரிசை பெல்ஜியம் தட்டிச் சென்றுள்ளது. இந்த பறங்கிக்காயின் எடை 583 kg.

கண்காட்சியின் மத்தியில் கூடாரம் அமைத்து பறங்கிக்காய்களைக் கொண்டு சமைத்த உணவு வகைகளையும் விற்பனைக்கு வைந்த்திருந்தனர். பறங்கிக்காய் சூப், பரங்கிக்காய் பர்கர், பறங்கிக்காய் கேக் என பல வகைகள். கண்காட்சிக்கு வருபவர்கள் வாக்கிச் செவதற்காக பறங்கிக்காய்களைக் குவித்து வைத்திருந்தனர். இந்த பறங்கிக்காய்களில் பொதுவாக இரண்டு வகை உண்டு. ஒன்று சமையலுக்கு பயன்படுவது. மற்றொன்று வெறும் அழகுக்காக வளர்க்கப்படுவது. ஆக, வாங்கும் போது எந்த வகை பறங்கிக்காய் வாங்குகிறோம் எனத் தெரிந்து வாங்குவது முக்கியம்.

இந்த கண்காட்சிக்குச் சென்ற போது எடுத்த புகைப் படங்களை எனது வலைப்பக்கத்தில் சேர்த்திருக்கிறேன். அவற்றை இங்கே காணலாம்.



இந்த நிகழ்ச்சியைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள:

Saturday, April 23, 2005

பால் மரக் காட்டினிலே!




நீண்ட இடைவெளிக்குப் பிற்கு இடையில் சில நாள் ஓய்வு கிடைத்தது. கடந்த முறை இண்டியாவர்த்தா இணையத்தளத்தின் வழி வாங்கியிருந்த புத்தகங்களில் சிலவற்றை படிக்கும் வாய்ப்பாக எனக்கு அமைந்தது. பால்மரக்காட்டினிலே - அகிலன் எழுதிய ஒரு நாவல். மலேசிய தோட்டப்புர வாழ்க்கை பின்னனியை அடிப்படையாகக் கொண்டு அமைந்த ஒரு நாவல் இது.


கதை முழுவதையும் படித்து முடித்த போது மலேசிய தோட்டப்புர மக்களின் வாழ்க்கையைக் கண்களால் பார்ப்பது போலவே இருந்தது. பல இடங்களில் தென்படும் மலாய் மொழி கலந்த மலேசியத்தமிழின் பிரயோகம், இந்த தோட்டத்திலேயே இருந்து கதை கேட்பது போன்ற எண்ணத்தை வரவழைக்கின்றது. கதைக்குக் கருவாக அவர் எடுத்திருக்கும் தோட்டத் துண்டாடல் பிரச்சனை என்பது மலேசிய தோட்டத்தொழிலாளர்களை மிக மோசமாக பாதித்த ஒரு வரலாற்று நிகழ்வு. இதனை கதையாகக் கொண்டு இவர் வடித்திருக்கும் பாங்கு நெஞ்சைத் தொடுகின்றது என்றே சொல்லலாம்.

மலேசியாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பினாங்குத்தீவிலேயே பிறந்து வளர்ந்த எனக்கு தோட்டப்புற வாழ்க்கை பரிட்சயமற்ற ஒன்று என்றே சொல்ல வேண்டும். இளம் வயதில் மலேசிய இந்து சங்கத்தின் சார்பிலும், பினாங்கு பயனீட்டாளர் சங்க சார்பிலும் வார இறுதி நாட்களில் தோட்டப்புறங்களில் சமூக சேவைக்காக சென்ற நாட்களில் பினாங்குக்கு அருகாமையில் உள்ள சில தோட்டங்களுக்கு அவ்வப்போது சென்ற அனுபவம் எனக்கு உண்டு. ஆனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையை இதுவரை நான் ஆழமாக கண்கானித்ததில்லை. இந்த நாவல் அந்த அனுபவத்தை அழகாக வழங்கியிருக்கின்றது.

நாவலில் வருகின்ற கதாபாத்திரங்களில் பாலன், கணேசன், கண்ணம்மா, தலைமை ஆசிரியர் சண்முகம், முருகன், வேலம்மாள், ராதா, முத்து, செல்லம்மா ஆகிய அனைத்து காதாபாத்திரங்களும் நாவலை படித்து முடித்த பின்னரும் யோசிக்க வைக்கும் கதாபாத்திரங்கள். கிராம இளைஞன் பாலன் மனதில் தோன்றும் சமூக பிரக்ஞை மனதைத் தொடுகின்றது. வாழ்க்கையையே தோட்டப்புற மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கும் அவனது கதாபாத்திரம் எனது மலேசிய நாட்டில் நான் சந்தித்த சிலரை எனக்கு மீண்டும் ஞாபகத்திற்குக் கொண்டு வராமலில்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் கூட மலேசியாவிற்குத் தமிழகத்திலிருந்து குடியேறிய மக்களின் வாழ்க்கை பல வகையில் இன்னல்களுக்கு ஆட்பட்டிருந்தது என்பதே உண்மை. 80களின் ஆரம்பத்தில் மலேசிய தேசிய பலகலைக்கழக பேராசிரியர் (தமிழர்) ஒருவரின் முயற்சியில் வெளிக்கொணரப்பட்ட செலாயாங் தமிழ் மக்களின் வாழ்க்கை பிரச்சனை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. படிப்படியாக நாடு முன்னேறிய போதிலும் இன்றளவும் கூட தமிழ் மக்கள் செம்பனை மற்றும் ரப்பர் மரத்தோட்டங்களில் (காடுகளில்) வாழும் வாழ்க்கை மனதை கசிய வைக்கும் ஒன்று. மக்களின் அறியாமை போக்கப்படும் போது தான் மாற்றம் ஏற்படும் என்பதை இந்த நாவல் நன்றாகக் காட்டுகின்றது.

ஒருவர் பிறர் நலனுக்காக யோசித்து பாடு படும் போது அவர்களை தாழ்வாக விமர்சனம் செய்து மனதை நோகடிப்பது மற்றும் தனது சுய நலனுக்காக தனது இனத்திற்கு மாறாக செயல்படுவது போன்ற விஷயங்களெல்லாம் இந்த நாவலில் காட்டபப்டுகின்றன. இது இன்றளவும் மாறாமலிருக்கும் ஒன்று. மலேசிய தமிழ் சமூக அமைப்புக்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் எனது நண்பர்களோடு பேசும் போதெல்லாம் இப்படிப்பட்ட சில நபர்களின் செயல்களைப் பற்றியும் நாங்கள் பேசி அலசுவதுண்டு. இது தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு சாபக்கேடு என்று அடிக்கடி பத்திரிக்கையில் பணியாற்றும் ஒரு நண்பர் குறிப்பிடுவார்.

இந்த நாவலின் முதல் பதிப்பு 1977ல் வெளிவந்துள்ளது. தாகம் வெளியீடாக வந்திருக்கும் இந்த நாவலை பலர் ஏற்கனவே படித்திருக்கக் கூடும். மலேசிய தோட்டப்புற தமிழர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நாவல்.

குறிப்பு: மலேசிய தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனைகளை அலசும் ஒரு வலைப்பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

Saturday, April 16, 2005

கர்நாடக இசைக்கச்சேரி

ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்து இங்கு ஜெர்மனியில் கர்நாடக இசை வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஏப்ரல் இரண்டாம் திகதி ப்ராங்பர்ட் நகரத்தில் ஒரு நாள் முழுவதும் இடைவிடாது தியாகராஜ கீர்த்தனைகள் பாடப்பட்டு மிகச்சிறப்பாக தியாகராத ஆராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக பிரத்தியேகமாக வந்திருந்த இசை வித்துவான்களிள் திரு.அசோக் ரமணியும் ஒருவர். இந்த நிகழ்ச்சிக்காக இங்கு வந்திருந்தவர் ஐரோப்பாவில் முக்கிய சில நகரங்களில் இசை கச்சேரி நடத்திக் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் புது வருடத்தை இசையோடு வரவேற்பதற்காக அவரது கச்சேரியை இங்கு ஸ்டுட்கார்ட் சித்தி விநாயகர் ஆலத்தில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


திரு.அசோக் ரமணி

திரு.அசோக் ரமணி கர்நாடக இசை உலகிற்கு தமிழ் கீர்த்தனைகளை வழங்கிய முக்கியமான ஒருவராகிய பாபநாசம் சிவன் அவர்களின் பேரன். இவர் கர்நாடக இசையோடு மிருதங்க இசைக்கருவியை வாசிக்கவும் கற்றவர். வாய்ப்பாட்டிலும் மிருதங்கத்திலும் தமது 15வது வயதிலேயே அரங்கேற்றம் செய்து புகழ் பெற்றவர். இவரது இசை நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8:30 அளவில் தொடங்கி இடைவிடாது 10:30 மணி வரையில் நிகழ்ந்தது.

ஆலயம் நிறைந்த பார்வையாளர்கள்

ஸ்டுட்கார்ட் நகரைப் பொருத்தவரை இம்மாதிரியான இசை நிகழ்வுகள் நடைபெருவது அபூர்வம் என்றே சொல்லலாம். வருடத்திற்கு அதிகபட்ஷம் 2 முறை தமிழகத்திலிருந்து யாராவது இங்கு வந்து தலையைக் காட்டினால் உண்டு. இல்லையென்றால் தமிழ் தொலைக்காட்சி வழியாகத்தான் கர்நாடக இசையை ரசிக்கமுடியும். அந்த வகையில் இந்தக் குறையையும் போக்குவதாக அமைந்தது இந்த நிகழ்வு.

பிரபாவதி குமரன், திரு.தமிழ்குமரன், திரு.அசோக் ரமணி, சுபா, திரு.யோக புத்ரா, அபிராமி

கச்சேரியின் முக்கியமான அம்சம், எல்லா பாடல்களுமே தமிழ் கீர்த்தனைகள். மனதை கொள்ளை கொண்டன இந்த தமிழ் கீதங்கள். பலருக்கும் தெரிந்த என்ன தவம் செய்தனை யசோதா, கந்தா வா, தீராத விளையாட்டுப் பிள்ளை, அலைபாயுதே கண்ணா, அகிலாண்டேஸ்வரியே என்ற பாடல்களோடு மேலும் பல தமிழ் கீர்த்தனைகளும் அடங்கியிருந்தன. இவருக்குப் பக்க வாத்தியமாக ஜெர்மனி டோ ர்ட்முண்ட் நகரைச் சேர்ந்த மிருதங்க வித்வான் பிரணவநாதன், வயலின் பிரணவன் மற்றும் கஞ்சிராவிற்கு ஒரு ஜெர்மானியரான ப்ராங்போர்ட்டைச் சேர்ந்த ஹெர்பெர்ட் லாங் ஆகியோர் அமைந்திருந்தனர்.

இசை வகுப்பில் பயிலும் மாணவர்கள் திரு.அசோக் ரமணியோடு

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஒன்றினை கவனிக்க முடிந்தது. முன்பெல்லாம் சிறுவர்கள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டும், பேசிக் கொண்டும் இருப்பார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியின் போது பல சிறுவர்கள் சத்தம் போடாமல், அங்கும் இங்கும் ஓடாமல் பாட்டுக்குத் தாளம் போட்டு தலை அசைத்து ரசித்துக் கொண்டிருந்தனர். ஆலயத்தில் தொடர்ந்து இசை பயின்று வரும் இந்தச் சிறுவர்கள் இப்போது இசையை ரசிக்கத் தாமாகவே பழகி விட்டனர். இதைப் பார்க்கும் போது மனதிற்கு பெறும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இம்மாதிரியான கச்சேரிகள் இங்கு தொடர்ந்து நடைபெற வேண்டும். இதனால் இங்கு வாழும் தமிழர்களும் இசையோடு ஒன்றி வாழும் வாய்ப்பு நிச்சயம் வளரும்.


Saturday, March 05, 2005

மாரியாத்தா..!

அலுவலகத்தில் நேற்று ஒரு பெண்ணை சந்திக்க நேர்ந்ததது. அவளது பெயர் மாரியாத்தா. தமிழ் பெயராக இருக்கிறதே தமிழ் பெண்ணோ என்று நினைத்து விட வேண்டாம். மேற்கத்திய பெண்தான் இவள். இவள் பெயர் என்னை இவளைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்ளவேண்டும் என்று தூண்டியது. சும்மா இருக்காமல், அவளிடமே விசாரிக்க ஆரம்பித்து விட்டேன்.

அவள் ரோமானியப் பெண். ரோமானிய நாட்டிலிருந்து வந்து இப்போது இங்கு எனது அலுவலகத்திலேயே ஒரு பிரிவில் வேலை செய்து கொண்டிருக்கின்றாள். அவள் பெயர் தமிழ் பெயர் போலவே இருக்கின்றது என்று சொன்னேன். அவளுக்கும் ஆச்சரியம். எழுதும் போது Mariatta என்று எழுதுகிறாள். உச்சரிக்கும் போது 'மரியட்டா' என்றில்லாமல் "மாரியாத்தா'' என்று தான் உச்சரிக்க வேண்டுமாம்.

தமிழில் மாரியம்மா, மாரி, மாரியாத்தா என்றெல்லாம் இந்தப் பெயர் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அதே போல மலாய் இனத்திலும், மரியம், மரியா என்றும் ஆங்கிலத்தில் மேரி என்றும் ஜெர்மானிய பெண்களிடையே மரிலூயிஸா, மரியானா, மரியா என்றும் இருக்கின்றது. ஆனால் ரோமானிய மொழியிலும் இதே பெயர் தமிழ் பெயர் போலவே இருப்பதைக் கேட்க ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.

தமிழ் மொழியைப் பொறுத்தவரை இப்போதெல்லாம் இந்தப் பெயர் பிரபலமான ஒன்றல்ல. மாரியாத்தா என்றவுடனேயே நமது மனகண்ணில் மாரியம்மன் தான் தோன்றுவாள். மலேசியாவில் ரப்பர் மரத்தோட்டங்களிலும் செம்பனை மரத்தோட்டங்கள் உள்ள இடங்களிலும் சிறிய சிறிய கோயில்கள் (மரத்தடி கோயில்கள்) ஏராளம் இருக்கும். பெரும்பாலும் வீரபத்திரன், மாரியம்மன் தான் வழிபடு தெய்வங்கள். அதிலும் மாரியம்மன் கோயிலென்றால் அதற்கு வருவோரும் அதிகம். திருவிழாக்களின் போது ஆட்டை பலிகொடுத்து பெரிய அளவில் விருந்து சமைத்து கிராமத்தில் இருக்கும் தமிழர்களெல்லாம் ஒன்று கூடி விழா கொண்டாடும் நிலை இன்னமும் மலேசிய கிராமங்களில் உள்ளது. கிராமங்களில் சில இடங்களில் இந்த தெய்வத்தை நினைத்து, தங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு ஒரு சிலர் மாரியம்மா என்ற பெயரை வைக்கின்றனர். ஆனால் இது குறைந்து கொண்டுதான் வருகின்றது. ஜெர்மனியைப் பொறுத்தவரை நிலமை அப்படியல்ல. மரியா, மரியானா என்பவை ஜெர்மானியர்களிடையே இப்போதும் பிரபலமான பெண்களுக்கான பெயர்கள் தான்.


அலுவலகத்தில் மாரியாத்தாவை பார்க்கும் போதெல்லாம் மாரியம்மனை நினைக்காமல் இருக்கமுடியுமா?

Sunday, February 27, 2005

ஆஷாடபூதி.... ????

சில நாட்களுக்கு முன்னர் இந்த மாத (Feb) திசைகள் இதழில் திரு.நரசய்யா எழுதியிருந்த மூச்சை நிறுத்திவிடு என்ற தலைப்பிலான சிறுகதையைப் படித்தேன். கடந்த சில நாட்களாக எனது மனதில் இந்தக் கதையைப் பற்றிய சிந்தனைகளே ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒரு உண்மை சம்பவத்தை கதையாக வடித்திருக்கின்றார் திரு.நரசய்யா. அருமையான கதை! கதையை விமர்சிப்பது இந்த பதிவின் நோக்கமல்ல. இதனை ஒட்டி என் மனதில் தோன்றிய எண்ணங்களைத்தான் இங்கு பதிவாக்க விரும்புகிறேன்.


மனதில் தோன்றுகிற எல்லா எண்ணங்களையும் நம்மால் உண்மையிலேயே எந்த பாகுபாடும் இல்லாமல் ப஡ர்க்க முடிகின்றதா என்பதுதான் கேள்வி. மனிதர்களாக பிறந்த அனைவருமே சலனங்களுக்கும் சபலங்களுக்கும் ஆட்பட்டவர்களே. ஆனால் அந்த சலனத்தையும் சபலத்தையும் நம்மால் உற்றுப் பார்த்து நானும் தவறு செய்யும் ஒரு மனிதர்தான் என்று நம்மால் சொல்லிக் கொண்டு இந்த நிலையிலிருந்து வெளியேறி நம் அழுக்குப் படிந்த மனத்தின் ஒரு பகுதியை சுத்தம் செய்ய துணிவு இருக்கின்றதா என்பதும் ஒரு கேள்வி. பொதுவாகவே நமது மக்களிடையே மேற்கத்தியர்கள் என்றால் இரண்டு விதமான பொதுப்படையான எண்ணம் தான் இருக்கின்றது. ஒன்று மேற்கத்தியர்கள் அறிவியல், தொழில்நுட்பம் பொருளாதாரம் ஆகியற்றில் மிக மிக மிக உயர்ந்தவர்கள் என்பது. மற்றொன்று மேற்கத்தியர்கள் கலாச்சாரம், பண்பாடு, குடும்ப ஒழுக்கம் ஆகியற்றில் மிக மிக குறைந்தவர்கள் என்பது. வெள்ளைக்காரிதானே, அவளுக்கு உடம்பு தெரியத் தெரிய உடை உடுத்திக் கொள்ளத்தான் தெரியும்; அவர்களுக்கெல்லாம் கணவன் குடும்பம் என்ற பக்தி பண்பாடு எல்லாம் சுத்தமாக இருக்காது, என்று மேம்போக்காக பேசுபவர்கள் பலர் நம்மிடையே உண்டு. இப்படி பிறரை தாழ்வாக சுட்டும் நமது விரல்கள் நமது பண்பாட்டில் உள்ள ஓட்டைகளை சுட்டிக் காட்ட எழுகின்றனவா?

மிகத் துரிதமாக வாழ்க்கைத்தரம் உயர்ந்து கொண்டிருக்கும் இந்த கால கட்டத்திலும் நம்மிடையே எத்தனையோ தாழ்வான குணங்கள் மனதில் பதிந்திருக்கின்றன, மாற்றம் அடையாமலேயே! ஜாதி என்ற பெயரில் மக்களை பிரித்து வைத்து சொல்லாலும் செயலாலும் துன்பப்படுத்தும் நிலை இன்று மாறி விட்டதா? ஆண் பெண் என்று பேதம் பிரித்து வைத்து ஆலயத்திலும், சடங்குகளிலும் கலாச்சார நிகழ்வுகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் குறைந்து விட்டனவா? திருமணம் செய்து கொண்ட பெண்களில் பலர் சுயமாக, சுதந்திரமாக இன்பகரமான வாழ்க்கையை வாழ முடிகிறதா? சுய முடிவு எடுக்கும் சுதந்திரம் இருக்கின்றதா? இந்தக் கேள்விகளெல்லாம் பலர் பல நேரங்களில் கேட்ட கேள்விகள் தான். இவற்றையெல்லாம் படிக்கிறோம், கேட்கிறோம் ஆனால் வாழ்க்கையில் நமக்கென்று வரும் போது எப்படி செயல்படுகிறோம் என்பது தான் கேள்வி.

மலேசியாவில் இருக்கும் என் தோழி ஒருத்தியோடு சில நாட்களுக்கு முன்னர் பேசிக் கொண்டிருந்தேன். 6 வருடக் காதல் இப்போது இனிக்கவில்லை. கசக்க ஆரம்பித்துவருகிறது என்று புலம்பினாள். தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கின்றது என்று அழுதாள். இவளது காதல் நிலவரம் இப்போதுத஡ன் எனக்குத் தெரிய வந்தது. அதுவும் நானே வற்புறுத்திக் கேட்ட பிறகுதான் என்னிடம் சொல்ல அவளுக்கு தைரியம் வந்தது. எனக்கு மிகுந்த வருத்தம். "இப்படி நெருக்கமாக பழகும் என்னிடமே இத்தனை நாள் இந்த பிரச்சனையை மறைத்து உனக்குள்ளேயே வருந்திக்கொண்டிருந்தாயே. உன்னிடம் என்னுடைய எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்து கொண்டிருக்கின்றேனே. அதில் என்னுடைய சலனங்களும் சபலங்களும் கூட அடங்குமே. இப்படியிருக்க நீ மட்டும் ஏன் என்னிடம் மறைத்து மறைத்து இப்படி ஏமாற்றுகிறாய் என்று மனதில் பட்டதை கேட்டு விட்டேன். அதற்கு அவள் தந்த பதில் இதுதான். "நீ இப்போது மலேசியக்காரி இல்லை. நீ வெளியூர்காரி. உன்னுடைய மனதில் தோன்றும் எண்ணங்களை நீ சுலபமாக வெளியிட முடியும். இதனால் உனக்கு உன் சுற்றுப் புறத்தில் உள்ளவர்களால் உனக்கு பாதிப்பு ஏற்பட்டாது. ஏனென்றால் அவர்களுக்கு உன்னுடைய சொந்த விஷயம் என்பது உன்னுடைய தனிப்பட்ட விஷயம். உன் மனமும் இந்த வாழ்க்கை முறைக்கு ஏற்றார்போல அப்படி பக்குவப்பட்டு விட்டது. உன்னால் தைரியமாக பல விஷயங்களைச் சொல்ல முடியும். ஆனால் என் நிலமை அப்படியல்ல. என்னைச் சுற்றி உள்ளவர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மிக மிக கவனமாக பார்த்து வருகின்றார்கள். இதில் சின்ன தவறு ஏற்பட்டாலும் அதனால் என்னுடைய மானமே போய்விடும். நான் மறைத்து மறைத்து தான் வாழ முடியும். இல்லாவிட்டால் இந்த சமூகத்தில் என்னுடைய பெயர் கெட்டுவிடும். காமம் சார்ந்த விஷயம் என்பது மக்களுக்கு பேசி அலசுவதற்கு சுவையான ஒரு விஷயம். அதிலும் மற்ற பெண்களைப் பற்றி பேசுவதென்றால் ஆண் பெண் இருபாலருக்குமே அல்வா சாப்பிடுவது மாதிரி" என்று சொன்னாள். இப்படி சொல்லும் இவள் காதலிப்பது திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள மனைவியுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் ஒருவரை.

முதலில் உருகி உருகி காதலித்த இந்த திருமணமானவருக்கு இப்போது தான், தான் செய்வது தவறு என்று புரிய ஆரம்பித்திருக்கிறதாம். அதனால் இந்த உறவை படிப்படியாக முறித்துக் கொள்ளலாமே என ஆலோசனை கூறியிருக்கிறார். இவரை நம்பி, வந்த வரனையெல்லாம் தடுத்துவிட்ட இந்த நாற்பதை எட்டும் பெண் இப்போது தலையில் இடி விழுந்த மாதிரியான அதிர்ச்சியில் இருக்கிறாள். அவருக்கும் உனக்கும் தெரிந்த நண்பர்களிடம் கூறி பேசிப் பார் என்றேன். "வெளியே சொல்லமுடியாது சுபா. அவரை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். என்னுடைய பெயர் தான் கெட்டுப் போகும். சேலையில் முள் விழுந்தாலும், முள்ளில் சேலை விழுந்தாலும் சேலைக்குத்தான் பாதிப்பு. அப்படிப்பட்ட சமுதாயத்தில் தான் நான் வாழ்கிறேன்" என்றாள் என் தோழி.

என்ன நியாயம் இது? ஏன் இந்த பாகுபாடு. உண்மையிலேயே நமது சமுதாயம் இந்த பாகுபாட்டை ஆதரிக்கின்றது என்றால் இது ஒரு குறையுள்ள சமுதாயம் தான். பண்பாட்டில் நாம் உயர்ந்தவர்கள் என்று பேசுகின்றோம். எப்போது இம்மாதிரியான மனித பாகுபாடு, ஜாதி பாகுபாடு, ஏற்றத்தாழ்வு எல்லாம் நமது மக்கள் சிந்தனையிலிருந்து ஒழிகின்றதோ அப்பாதுதான் நாம் பண்பாட்டில் உயர்ந்தவர்களாக நம்மை கருதமுடியும். நமது மனதில் உள்ள அழுக்கான சிந்தனைகளை வெளியே காட்டாமல் வெற்றிகரமாக மறைத்து வைத்துக் கொண்டு, மற்றவர்கள் வாழ்க்கையில் நிகழ்கின்ற சிறிய சிறிய பிரச்சனைகளையும் பேசி பேசி அவர்களைத் துன்பப்படுத்துவதுதான் பெரும்பாலும் நிகழ்ந்து வருகின்றது. இதையெல்லாம் யோசிக்கும் போது என் தோழிக்காக மனம் வருந்தாமல் இருக்க முடியவில்லை!

Monday, February 21, 2005

பீஸா போட்டி

சனிக்கிழமை உள்ளூர் ஜெர்மானிய தொலைக்காட்சி சேனல் ZDF -ல் ஒலியேறிய Wetten Dass நிகழ்ச்சியில் சுவாரசியமான ஒரு நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டது. இது மக்களிடையே புதைந்துள்ள வித்தியாசமான திறமைகளை வெளிக்காட்டும் ஒரு நிகழ்ச்சி.

இதில் கலந்து கொள்ள 4 குழுக்கள்/தனிபர் வந்திருந்தனர். அதில் ஒன்று என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.

2 நண்பர்கள். இவர்களுடைய திறமை என்னவென்றால் எந்த விதமான ரெடி மேட் பீஸா (Pizza) வாக இருந்தாலும் கண்களை மூடிக் கொண்டே அந்த பீஸாவின் பெயரை சொல்லிவிடுவதுதான். இந்த இருவரும் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் மிக அதிகமாக பீஸாவையே முக்கிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையிருந்ததால் அவர்களுக்கு உள்ளூரில் கிடைக்கக்கூடிய எல்லா brand பீஸாவும் அத்துப்படி. "எந்த பீஸாவாக இருந்தாலும் கொடுங்கள். கண்களை மூடிக் கொண்டு அது என்ன பீஸா என்று சொல்லி விடுவோம்" என்று சவால் விட்டுக் கொண்டு வந்திருந்தனர்.


இவர்களுக்கு நான்கு வாய்ப்புக்கள் தான் வழங்கப்படும். இந்த நான்கிலும் சரியான பீஸாவை பெயரைச் சொன்னால் அடுத்த கட்ட சோதனைக்குச் சென்று பிரமாதமான பரிசுகளைத் தட்டிச் செல்ல முடியும்.


இவர்களை சோதிப்பதற்காக ஜெர்மனியில் கிடைக்கக்கூடிய ஏறக்குறைய 200 விதமான பீஸாக்களை வரவழைத்து அதனை பெரிய குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டனர். இது கண்ணாடியால் ஆன குளிர்சாதனப் பெட்டி. நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கும் தெரியும் வகையில் பீஸாக்களை இந்த கண்ணாடி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டனர். இதில் இத்தாலியன், ஆசியன், கொரியன், அமெரிக்கன் பீஸாக்களும் அடங்கும். இப்போது மிகப் பிரபலமாக உள்ளூர் அங்காடிகளில் கிடைக்கக்கூடிய Big Pizza வகைகளும் அடங்கும்.

இரண்டு நண்பர்களையும் கண்களைக் கட்டி ஒருவருக்கு முன் ஒருவரை அமர வைத்து விட்டனர். கண்கள் நன்றாக மறைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டபின் சோதனை ஆரம்பமானது. இந்த பீஸா குவியலிலிருந்து ஒன்றை எடுத்து அதன் அட்டைகளை உருவி விட்டு ஒருவர் கையில் வைக்க, அதனை விரல்களால் தொட்டுப் பார்த்தே அதில், காளான் அல்லது மிலகாய், அல்லது டூனா, காய்கறிகள் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே 4 பீஸாக்களையும் நண்பர்கள் கண்டு பிடித்து விட்டனர். ஒவ்வொரு பீஸாவையும் நிகழ்ச்சி நடத்துனர் இவர்கள் கையில் கொடுக்கும் போது எனக்கு சந்தேகம் தான். எப்படி இவர்கள் சரியாக இதன் brandஐ கண்டுபிடிக்கப் போகின்றார்கள் என்று. ஒவ்வொரு சோதனைகளையும் இரண்டு நிமிடங்களுக்குள் செய்து முடித்து வெற்றி பெற்றனர் இந்த நண்பர்கள். ஏந்த வகை பீஸா என்று கூட சுலபமாக சொல்லிவிட முடியும். ஆனால் அது எந்த brand என்று கண்டு பிடிப்பது அவ்வலவு சுலபமான காரியம் இல்லையே. சீஸ் பீஸாவிலேயே 30 வகை இங்கு கிடைக்கின்றன. அதேபோலத்தான் டூனா பீஸாக்களிலும் 20 / 30 வகைகள். இப்படியிருக்க இவர்களால் இப்படி பிரித்து இனம் கண்டு பிடிக்க முடிந்ததைப் பார்த்து என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. இதுவரை பார்த்திராத, மிக மிக ஆச்சரியப்பட வைத்த சுவாரசியமான போட்டி இது.